முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

நாக்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். மூட்டு வலி காரணமாக விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் (15 ரன்கள்), ரோகித் சர்மா (2 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன்பின் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் – சுப்மன் கில் அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வெற்றிப்பாதைக்கும் அழைத்து சென்றனர்.

சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேலும் அதிரடியாக விளையாட இந்திய அணி எந்த வித சிரமமுமின்றி வெற்றியை நோக்கி பயணித்தது.

இதனிடையே சுப்மன் கில் அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் அக்சர் படேலும் 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அக்சர் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 2 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.

வெறும் 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஜடேஜா 12 ரன்களுடனும், பாண்ட்யா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மக்மூத் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.