அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவ்வாறு வந்திறங்கியர்கள் பலரும் கூறும் கண்ணீர் கதை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜன்ட்டுகள் மீதான நடவடிக்கைகளை அரசு கடுமையாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
லவ்ப்ரீத்தின் கண்ணீர் கதை: பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான லவ்ப்ரீத் கவுர் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தனது மகனுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். இவரது கணவர் அங்கு சில ஆண்டுகளாக வேலை செய்துவரும் நிலையில் கணவருடன் இணைந்து வாழும் விருப்பத்தில் மகனுடன் புறப்பட்டுள்ளார்.
இதற்காக லவ்ப்ரீத் குடுபத்தினர் ரூ.1.05 கோடி பணத்தைத் திரட்டி ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளனர். மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பத்திரமாக அமெரிக்காவுக்குள் சேர்ப்போம் என்பதே அவர்களுக்கு ஏஜென்ட்டுகள் சொன்னது. ஆனால் அவர் ‘டங்கி ரூட்’ என்றழைக்கப்படும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்வோரின் பாதையில் மிகக் கடுமையான சவால்களுக்கு இடையே பயணிக்கும்படி செய்யப்பட்டுள்ளார். இதனால் இப்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கணவருடன் சேர வேண்டும் என்பதற்காக லவ்ப்ரீத் தெரிந்தே இதற்கு ஒப்புக் கொண்டாரா இல்லை அவர் ஏமாற்றப்பட்டாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், லவ்ப்ரீத் ஓர் ஊடகப் பேட்டியில், “எங்களை நேரடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதாகவே ஏஜென்ட் கூறினார். ஆனால் எதிர்பாராமல் இவ்வாறு நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் லவ்ப்ரீத், மகனுடன் கைது செய்யப்பட்ட தகவலை கபூர்தலாவில் உள்ள பெற்றோருக்கு லவ்ப்ரீத்தின் கணவர்தான் தெரிவித்துள்ளார். லவ்ப்ரீத் நாடுகடத்தப்பட்டதையும் அவர் உறுதி செய்துள்ளார். இது குறித்து கபூர்தலா பஞ்சாயத்துத் தலைவர், “லவ்ப்ரீத் பயணத்துக்கான பணத்தை அமெரிக்காவில் உள்ள அவரது கணவரே ஏற்பாடு செய்தார். போதாததற்கு நிலத்தை அடமானம் வைத்தும் கடன் பெற்றனர்.” என்று ஊடகங்களிடம் கூறினார்.
டங்கி ரூட்.. இந்தியாவில் இருந்து புறப்பட்ட லவ்ப்ரீத் முதலில் கொலம்பிய குடியரசில் உள்ள மெடலின் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து எல் சால்வடாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து 3 மணி நேரம் நடைபயணமாக கவுதேமாலாவுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மெக்சிகோ எல்லைக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர். மெக்சிகோ – அமெரிக்கா எல்லையிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தவர்கள் கடைசியாக ஜனவரி 27-ல் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டோம் இனி கணவருடன் சேர்ந்துவிடலாம் என லவ்ப்ரீத் எண்ணியுள்ளார். ஆனால் அங்கே அவருக்கு நடந்ததோ வேறு.
இது குறித்து அவர், “நாங்கள் அமெரிக்காவுக்குள் சென்றபோது அவர்கள் எங்கள் ஃபோனின் சிம் கார்டை அப்புறப்படுத்தச் சொன்னார்கள். மேலும் கம்மல், வளையல் என அனைத்து ஆபரணங்களையும் கழற்றி ஒப்படைக்கச் சொன்னார்கள். ஏற்கெனவே வேறொரு நாட்டில் என் உடைமைகள் அனைத்தும் தொலைந்துபோனது. இந்நிலையில் முகாமுக்குச் செல்லும் முன் எல்லாவற்றையும் இழந்தேன். முகாமில் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டோம். பிப்ரவரி 2-ம் தேதி நாங்கள் கைது செய்யப்படுவதாகக் கூறினர். எங்கள் கைகள், இடுப்பு, கால்களில் விலங்கிட்டனர். குழந்தைகளுக்கு மட்டுமே விலங்கிடவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக 40 மணி நேர விமானப் பயணத்தில் நாங்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்றுகூட எங்களிடம் யாரும் சொல்லவில்லை. இறுதியாக நாங்கள் இந்தியா வந்தடைந்ததாகச் சொல்லப்பட்டது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அமெரிக்காவுக்குச் சென்று கணவர், குடும்பம் என வாழக் கண்ட கனவு எல்லாம் நொறுங்கிப்போனதை உணர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.