புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிஹாருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 எம்பிக்கள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பாட்னா விமான நிலைய விரிவாக்கம், நான்கு புதிய பசுமை விமான நிலையங்களை நிறுவுதல், பிஹ்தாவில் பிரவுன்ஃபீல்ட் விமான நிலையத்தை நிர்மாணித்தல் ஆகிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதன்மூலம், மாநிலத்தின் வளர்ந்து வரும் விமானத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று நிதியமைச்சர் கூறினார்.
மேலும், மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் இ.ஆர்.எம். திட்டத்துக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், 50,000 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இது, விவசாய வளர்ச்சியை பெருக்கி, விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பலனளிக்கும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். அதோடு, பிஹாரில் பரவலாக வளர்க்கப்படும் மக்கானாவின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மக்கானா வாரியம் உருவாக்கப்படும் என்றும் இந்த முயற்சி மக்கானா விவசாயிகளுக்கு கணிசமாக பயனளிக்கும் என்றும், மாநிலத்தின் விவசாயத் துறையை மேம்படுத்தும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த பட்ஜெட்டுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவேற்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மத்திய பட்ஜெட் நேர்மறையானது, வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் முற்போக்கானது மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. இந்த பட்ஜெட் மூலம், நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பட்ஜெட்டில் பிஹாருக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பிஹாருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சலசலப்பும் பதிலும்: முன்னதாக, பட்ஜெட் அறிவிப்பில் பிஹார் மாநிலத்துக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றதற்கு, அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதுதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அது குறித்து, பட்ஜெட்டுக்குப் பிறகு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் காலத்தால் அழியாத சொற்றொடரான ‘மக்களின் அரசாங்கம், மக்களால், மக்களுக்கு’ அளிக்கப்பட்ட பட்ஜெட் இது. மக்களின் குரலை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அசாம் மாநிலத்துக்கும்தான் தேர்தல் வருகிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நாளந்தா ராஜ்கிர் கலாச்சார மையங்களைக் கொண்ட மாநிலம் பிஹார். இவ்வளவு இருந்தும் அம்மாநிலத்தில் இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை. இதற்கு நாமெல்லாம் பொறுப்பு இல்லையா? அவர்களுக்கு இதை நாம் கொடுக்க வேண்டாமா? பிஹார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிஹார் தொழிலாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வேலை செய்ய திட்டங்களை வகுக்க வேண்டாமா?” என்று எதிர்கேள்விகளை அடுக்கியது நினைவுகூரத்தக்கது.