ஆந்திராவில் இன்டர்மீடியட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படுவதால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திராவில் மார்ச் 1 முதல் 19-ம் தேதி வரை இன்டர்மீடியட் முதலாம் ஆண்டுக்கும் (பிளஸ் 1), மார்ச் 3 முதல் 20-ம் தேதி வரை இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டுக்கும் (பிளஸ் 2) பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
‘ஹை டெக்’ முதல்வர் என்று அழைக்கப்படும் சந்திரபாபு நாயுடு, தகவல் தொழில்நுட்பத்தை உடனுக்குடன் பயன்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார். இதனால் தான் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இவரது ஆட்சியில் ஐ.டி. துறை ஹைதராபாத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது.
சந்திரபாபு தற்போது ட்ரோன்களை பாதுகாப்பு, விவசாயம், மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளுக்கு பயன்படுத்தி வருகிறார். ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறார். காகிதங்கள் பயன்பாடு இல்லாத நிர்வாகத்தை அமல்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ் என அனைத்தும் வாட்ஸ் அப் மூலம் விநியோகம் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி இதற்கான பொது எண்ணும் (9552300009) வழங்கப்படுள்ளது. இதன்மூலம் வருவாய், போக்குவரத்து, காவல் துறை, கல்வி, மின்சாரம் என பல்வேறு துறைகள் தொடர்புடைய 161 சேவைகள் வெள்ளோட்டமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நமது நண்பன் (மன மித்ரா) என்ற பெயரில் நாட்டிலேயே முதன் முறையாக அமல்படுத்தப்பட்ட இந்த வாட்ஸ் அப் சேவை மூலம் ஆந்திராவில் இன்டர்மீடியட் மாணவர்களுக்கு நேற்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஜூனியர் கல்லூரிக்கு செல்லும் நேரம் மிச்சமாகிறது, கல்லூரிக் கட்டணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே ஹால் டிக்கெட் எனும் கல்லூரிகளின் கிடுக்குப்பிடிகளும் இனிமேல் செல்லாது என பெற்றோர்களும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் அரசுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகள் குவிகின்றன.