“சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – திருமாவளவன்

மதுரை: “இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (பிப்.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால் அது தேசத்துக்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

நியாயமான முறையில் டெல்லியில் நடந்திருக்கும் தேர்தல் நடந்திருக்குமா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, டெல்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாக கொண்டு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஆகிய கட்சிகள் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பார்த்தவாறு, திமுக மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி, திமுக பெறும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முன்னிலை நிலவரம் @ 11.00 AM:

பாஜக கூட்டணி – 43
ஆம் ஆத்மி – 27
காங்கிரஸ் – 0
(ஆட்சி அமைக்க தேவை 36 இடங்கள்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.