ஈரோடு: “நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை” என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.
ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்.
இந்த இடைத்தேர்தலில், திமுக கூடுதலான வாக்குகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் நிராகரித்து உள்ளனர். கள்ள ஓட்டுக்கள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம். ஈரோடு இடைத்தேர்தலை 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்த்ததால், திமுக தலைமைக்கு அச்சம் வந்துள்ளது. எனவே, 2026-ம் ஆண்டு தேர்தலில் இந்த மண்ணில் திமுக கடுமையான போராட வேண்டியிருக்கும்.
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. பெரியார் குறித்து சீமான் பேசியது புரிதல் அடிப்படையில் சரியாக இருப்பதால் தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி மக்களை நம்பிக்கை வைத்து தேர்தலில் நின்றது,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, 8-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 43,821 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் வெற்றி முகம் கண்டுள்ளதால் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது சுற்று நிலவரம்: வி.சி.சந்திரகுமார் (திமுக) – 55,849 வாக்குகள் / சீதாலட்சுமி (நாதக) – 12,028 வாக்குகள் / நோட்டா – 2,710.