தனிநாடு கேட்ட திமுக எம்எல்ஏ; தடுக்க முயன்ற கே.என். நேரு; விளக்கமளித்த ஆ.ராசா

திருச்சி: “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது” என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருச்சி புத்தூர் நால்ரோட்டில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி பேசியபோது, “மத்திய பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நூறாண்டுகள் ஓரவஞ்சனை செய்வீர்களா?

தமிழகத்தில் ஆட்சி அமைத்தவுடன் அண்ணாவை பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ‘தனி தமிழ்நாடு கோரிக்கையை இனி எழுப்புவீர்களா?’ என்று, அதற்கு அண்ணா சொன்னார். ‘அது ஒரு ஓரமாக இருக்கிறது. எப்போது மத்திய அரசு வஞ்சித்து, எங்களை கண்டுகொள்ளாமல் விடுகிறதோ அப்போது, நாங்களும் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்’ என்றார்.

அதுபோல, தொடர்ச்சியாக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது. பிரதமரை சட்டையைப் பிடித்து மட்டும்தான் ஆ.ராசா கேள்வி கேட்கவில்லை. அந்தளவுக்கு அவர் கேள்விகளை கேட்கிறார். ஆனால் அவர்களை திருத்த முடியாது.

எனக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் உண்டு. தினமும் காலை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பத்திரிகைகளை ஒரு மணி நேரம் படித்துக் கொண்டிருப்பேன். பின்னர் நடைபயிற்சி செல்வேன். அப்போது ஒரு செய்தி படித்தேன். எம்எல்ஏ அலுவலகத்தை பிரியாணி கடைக்கு வாடகைக்கு விட்டேன் என்று அதிமுக மாநகரச் செயலாளர் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

நான் ஆண்டுதோறும் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் வருமான வரியும், 2 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும் மத்திய அரசுக்கு பிச்சையாக இடுகிறேன். நான், அமைச்சர் நேரு, மாவட்டச் செயலாளர் வைரமணி, ஒன்றியச் செயலாளர் கதிர்வேல் எல்லாம் பரம்பரை பணக்காரர்கள். சொத்துக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று, 2-ம் தாரம் கல்யாணம் செய்து எங்களை பெற்றெடுத்தார்கள். என்னை போய், எம்எல்ஏ அலுவலகத்தை பிரியாணி கடைக்கு வாடகைக்கு விட்டேன் என்று அதிமுக செயலாளர் சீனிவாசன் பேசுகிறார். நான் நேர் வழியாகவும் ஓடுவேன். குறுக்கு வழியாகவும் ஓடுவேன். தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் சீனிவாசனை இம்மேடையில் எச்சரிக்கிறேன்.

தமிழ்நாடு தனிநாடாக நாங்கள் கேட்கக்கூடாது என்றால் வரும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார். பழனியாண்டி தனிநாடு என்று பேசும்போதெல்லாம், மாவட்டச் செயலாளர் வைரமணியிடம், ‘பேச்சை நிறுத்தச் சொல்லு’ என்று அமைச்சர் நேரு சைகை காட்டியபடியே இருந்தார்.

இரண்டு முறை எம்எம்ஏ பழனியாண்டியை, வைரமணி தோளில் தட்டியும், அவர் தான் பேச நினைத்த அனைத்தையும் பேசி முடித்துவிட்டு தான் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “பழனியாண்டி தனிநாடு என்று பேசிய போது அமைச்சர் நேரு பதறிவிட்டார். ஆனால் நாம் தனிநாடு கேட்கவில்லை. அண்ணா அதைக் கைவிட்டு விட்டார்.

இந்திய ஒருமைப்பாடு வேண்டும் என்பதில் திமுகவுக்கு இணை யாரும் இல்லை. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில், அண்ணா அறிவாலயத்திலும், கோட்டையிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தவர் கருணாநிதி. தேசிய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்த போது, இந்தியாவில் அதிகபட்ச நிதியாக ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து வழங்கியவர் அண்ணா. அதேபோல, கார்கில் போர் நடந்த போது இந்தியாவில் அதிகபட்சமாக, 100 கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் கருணாநிதி” என்று பேசி தனிநாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.