விருதுநகர்: 40 பவுன் திருட்டு நகை, துப்பாக்கி… வசமாகச் சிக்கிய காவலர்; மர்மநபருக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் விலை உயர்ந்த டூவீலரில் வந்த நபர் கிராமப்புறப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஊர்மக்கள் அவரிடம் சென்று கேட்டதற்கு, பிரதான சாலைக்குச் செல்ல வழிதெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி இருக்கிறார். இருப்பினும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மக்கள், மர்மநபர் குறித்த தகவலை வச்சக்காரப்பட்டி போலீஸூக்கு தெரிவித்தனர்.

காவல் நிலையம்

இதனிடையே அந்த மர்மநபர், தான் ஓட்டிவந்த விலை உயர்ந்த டூவீலரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்குச் சென்ற வச்சக்காரப்பட்டி போலீஸார், சாலை ஓரத்தில் நின்றிருந்த டூவீலரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். டூவீலரில் உள்ள பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த டூவீலர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியிலிருந்து நேற்று நள்ளிரவு திருடுபோன வாகனம் எனத் தெரியவந்தது. டூவீலரை திருடிவந்த மர்மநபர், நாசரேத் பகுதியிலிருந்து டூவீலரை ஓட்டி பூசாரிப்பட்டிக்கு ஏன் வந்தார்?, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.

தொடர்ந்து மர்மநபர் தப்பியோடிய காட்டுப்பகுதிக்குள் சென்று போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்குச் சந்தேகப்படும்படி மதுபோதையிலிருந்த மற்றொரு நபரை போலீஸார் பிடித்து விசாரிக்கும்போது அவரிடம் 40 பவுன் நகை, கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களும் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை, தனியே ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த விசாரணையில் பிடிபட்ட அந்த நபர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி (வயது 33) என்பதும், தமிழ்நாடு காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலராகத் தற்போது பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

காவல்நிலையம்

விடுமுறையில் இருக்கும் தனுஷ்கோடியிடம் கைத்துப்பாக்கி எப்படி வந்தது என போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு அவரிடமிருந்து எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை. மாறாக அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். தொடர்ந்து திருட்டு டூவீலர் மற்றும் நகைகள் குறித்து தனுஷ்கோடியிடம் விசாரிக்கையில், “டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருக்கும்போது தனக்கு எதிரே அமர்ந்து மது அருந்திய நபரின் டூவீலர்தான் அது. தனக்கு அவசர மருத்துவச்செலவு உள்ளது. ஆகவே தன்னிடம் இருக்கும் நகைகளை வாங்கிக்கொண்டு பணமாகத் தரும்படி மர்மநபர் கூறினார். அதன்படி தங்க நகைக்கு ஆசைப்பட்டு அவரிடம் நகையைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்ததாகப் பதில் அளித்துள்ளார். இதனைப் பதிவு செய்துகொண்ட போலீஸார், தனுஷ்கோடி சொன்னபடி தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்” என்றனர்.

இதற்கிடையே, போலீஸால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை என்ற தகவலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து போலீ‌ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.