ஆர்சிபிக்கு தொடரும் சோகம்… இந்த வீரரும்காயத்தால் விலகல்? மாற்று வீரர்கள் யார் யார்?

IPL 2025: 18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. தலா 5 கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீது மட்டுமின்றி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் இந்தாண்டு பலமாக காணப்படுகிறது. 

ஆனால், வழக்கத்தை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Cha) அணிதான் வித்தியாசமானதாக தோற்றமளிக்கிறது. பெரிய பெரிய நட்சத்திர வீரர்களை மட்டும் குறிவைத்து தூக்குவதை வாடிக்கையாக வைத்திருந்த ஆர்சிபி இந்த முறை அந்த வியூகத்தை கைவிட்டு, அணி காம்பினேஷனுக்கு ஏற்றவர்களை பார்த்து பார்த்து எடுத்துள்ளது எனலாம்.

IPL 2025: ஆர்சிபியில் மினி இங்கிலாந்து அணி

மோ போபாட் ஆர்சிபியின் இயக்குநர் ஆன பின்னர், நடைபெற்ற முதல் மெகா ஏலம் இது என்பதால் முழுமையாக ஆர்சிபிக்கு என்ன தேவையோ அதை பார்த்து பார்த்து செய்துள்ளார். அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக்கும் உள்ளூர் இளம் வீரர்களை அடையாளம் காட்டியிருக்கிறார்.

மோ போபாட் 2019 உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். அந்த வகையில், இந்த முறை அவர் ஆர்சிபிக்கு பில் சால்ட், லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தல் என வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் இங்கிலாந்து வீரர்களை அதிகம் அள்ளிப்போட்டிருக்கிறார். இவர்கள் மட்டுமின்றி ஹேசில்வுட், டிம் டேவிட், நுவான் துஷாரா, ரொமாரியோ ஷெப்பேர்ட், லுங்கி இங்கிடி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

IPL 2025: ஹேசில்வுட் காயம்… 

இதில் பில் சால்ட், லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தல், ஹேசில்வுட் ஆகிய நால்வரே முதற்கட்டமாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதில், ஹேசில்வுட் ஏற்கெனவே காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியிருப்பதால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதுவே ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

IPL 2025: காயத்தால் ஜேக்கப் பெத்தல் விலகல்?

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடை எலும்பில் காயம் காரணமாக ஜேக்கப் பெத்தல் 3வது ஒருநாள் போட்டியில் இருந்தும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இருந்தும் விலகியிருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்த பெத்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த சூழலில், தற்போது அவர் காயத்தில் சிக்கியிருப்பது ஆர்சிபிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

IPL 2025: ஜேக்கப் பெத்தலுக்கு மாற்று வீரர்கள் யார் யார்?

ஜேக்கப் பெத்தல் ஒருவேளை ஐபிஎல் தொடருக்குள் காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் அவருக்கு பதில் டிவால்ட் பிரேவிஸ், டான் லாரன்ஸ், ஷாய் ஹோப் உள்ளிட்டோரை அணியில் மாற்று வீரராக எடுக்கலாம். ஆர்சிபியின் மிடில் ஆர்டருக்கு இவர்கள் பலம் சேர்ப்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.