’பிஎம் ஸ்ரீ’ பள்ளி விவகாரம்: மத்திய அரசு நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்துவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு

சென்னை: “தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது,” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமானது 2018-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் 60% பங்கான ரூ.2,152 கோடி நிதியினை தமிழகத்துக்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. 2023-24ஆம் ஆண்டுக்குத் தமிழகத்துக்கென ரூ. 3,533 கோடி திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிதியில் இரண்டு தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் தவணை விடுவிப்பதற்கு முன்பாக மத்திய அரசு ’பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நிதியினை விடுவிக்க முடியும் என வலியுறுத்தியது.

’பிஎம் ஸ்ரீ’ பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வது சார்ந்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தலைமைச் செயலாளரால் 23.02.2024 அன்று கடிதம் அனுப்பப்பட்டது.

’பிஎம் ஸ்ரீ’ பள்ளிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, தனது அறிக்கையில் ’பிஎம் ஸ்ரீ’ பள்ளிகள் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல் நிபந்தனையாக மும்மொழி கொள்கையினை பின்பற்றுவதை வலியுறுத்தி உள்ளது. இந்த நிபந்தனையானது தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ’பிஎம் ஸ்ரீ’ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதையும், ஏற்கெனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்துவதையும் ஒன்றாகக் கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியினை விடுவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும், 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் 60% பங்கான ரூ. 2,152 கோடி நிதியினை தமிழகத்துக்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும், மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியினை மத்திய அரசு விடுத்துள்ளது.

எனவே, தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியும், 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி ரூபாய் 2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.