காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ரயில் மூலம் இன்று (பிப்.12) காலை சென்னை வருகிறார். அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் அவர் காலை 8.05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று (பிப்.11) பிற்பகல் 2.45 மணிக்கு, விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு, ஹெலிகாப்டரில் மாலை 6 மணிக்கு வாரங்கல் சென்றடைந்தார்.
வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்றிரவு 7.45 மணிக்கு வாரங்கல் ரயில் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். இன்று (பிப்.12) காலை 6.35 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் ராகுல்காந்தி, கார் மூலம் காலை 7.15 மணிக்கு, சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 4-க்கு வந்து சேர்கிறார். அங்கிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் காலை 8.05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். சென்னையில் அவருக்கு வேறு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸார் தெரிவித்தனர். ராகுல்காந்தி வருகையையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.