வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழிலதிபர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற தமிழ்நாடு, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தியது. இதன்மூலம் 750 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியதாகவும், அமெரிக்காவின் எப்சிபிஏ சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதால் அதானிக்கு எதிராக பிடிவாரண்டையும் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது எப்சிபிஏ சட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.