பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக, அவர் பயணிக்கும் விமானத்திற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் தனது பிரான்ஸ் பயணத்தை நேற்று முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் மும்பை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட ஒருவர் பிரதமர் மோடியின் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த அந்த நபரை போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். என்றாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மிரட்டலில் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிற புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்து விசாரணையை தொடங்கினோம். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது பிறகு தெரியவந்தது” என்றனர்.
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு மிரட்டல் அனுப்பப்பட்டது,
இரண்டு ஐஎஸ்ஐ முகவர்கள் தொடர்புடைய வெடிகுண்டு தாக்குதல் திட்டம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர கடந்த ஆண்டு பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கண்டிவ்லியை சேர்ந்த ஷீத்தல் சவான் என்ற 34 வயது நபரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.