“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” – அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது.
இது உதாரணம் தான். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கட்சித் தலைமை தங்களை கண்டுகொள்ளவில்லையே என்ற புலம்பலிலும் தவிப்பிலும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தங்கள் மாவட்டத்து மந்திரிகள், செயலாளர்கள் தங்களை உதாசீனப்படுத்துவதை எடுத்துச் சொல்லி பரிகாரம் தேடமுடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக-வில் கூட இத்தனை மனக்குமுறல்கள் இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் திமுக-வின் அடிமட்டம் வரை அதிருப்தி அலை அடிக்கிறது.
கட்சியின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகளுக்குள் சரியான புரிதல் இல்லாததால் இடைவெளி அதிகரித்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமட்டத் தொண்டர்களை மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, புதிதாக பொறுப்புக்கு வந்தவர்கள் மூத்த நிர்வாகிகளை ஏற்க மனமில்லாமல் பெயரளவில் ஒன்றாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.
மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே நல்லது செய்ய நினைக்கிறார்கள். மற்றவர்களிடம் அவர்கள் முகம் கொடுத்துப் பேசக்கூட மறுக்கிறார்கள். கட்சி அறிவிக்கும் போராட்டங்கள், மாநாடுகளுக்கு ஆட்களைத் திரட்டவும், தேர்தல் நேரத்தில் எதிக்கட்சியினருடன் சண்டை போட்டு கட்சிக்கு ஓட்டு சேகரிக்கவும் மட்டும் தொண்டன் வேண்டும்.
ஆனால், ஆட்சியின் பலன்கள் அவனுக்கு கிடைத்துவிடக் கூடாது என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்தக் கேள்வியை உட்கட்சிக் கூட்டங்களில் பலரும் இப்போது வெளிப்படையாகவே எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். எழில் அரசன் எழுப்பிய கேள்வியும் அதுதான். இதே மனநிலையில் இருக்கும் திமுக தொண்டர்கள் பலரும் இந்தக் கட்சியில் வாய்பில்லை என்றால் அடுத்த கட்சி என்ற மனநிலைக்கு இப்போது வந்துவிட்டார்கள்.
திமுக தொண்டன் அரசின் சலுகைகளைப் பெறவும், அவனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்த்து வைக்கவும் மாவட்ட நிர்வாகிகளோ, அமைச்சர்களோ தயாராய் இல்லை. மாறாக, கோரிக்கை மனுவுடன் செல்லும் தொண்டனை அமைச்சருக்கோ, மாவட்டச் செயலாளருக்கோ நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் குறுக்கே இருந்து கொண்டு அவர்களை அண்ட விடுவதே இல்லை.
கட்சி தலைமையில் மட்டுமல்லாது மாவட்ட அளவிலும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் இவர்களின் குடும்பத்தினர் தான் கட்சியிலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தற்போது உதயநிதிக்கு சிக்கலில்லாமல் இருப்பதற்காக அவரது விசுவாசி களுக்கும் பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
போதாக்குறைக்கு, மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களும் இங்கே வலுவான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். இதனால் இந்தக் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்த வேர்கள் உதாசீனப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் தான் கட்சிக்குள் இருக்கும் அதிருப்திகள் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இனியும் எஜமான் தோரணையில் மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் கட்சித் தலைமையும் இருப்பார்களேயானால் அது திமுக-வுக்குத்தான் பேரிழப்பாக முடியும்.
அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் கட்சியின் வேர்களான அடிமட்டத் தொண்டனின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை உதாசீனம் செய்பவர்களை கண்டித்து களையெடுக்க வேண்டும்” என்றனர். செய்யுமா திமுக தலைமை?