தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
பொதுவாக புதிதாக தொடங்கப்படும் கட்சிகளில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், நடிகர்கள் தாமாக வந்து இணைவது வழக்கம். விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அப்படி பலர் இணைந்தனர். கமல் கட்சி தொடங்கியபோதும்கூட பல முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் அவரது மக்கள் நீதி மய்யத்தில் கலந்தனர்.
தவெக உதயமாகி ஒரு வருடம் ஆன பிறகும் அந்தக் கட்சியில் பெரிய அளவில் பிரபலங்கள் இணையவில்லை. இதனால்தான் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் தங்கள் பக்கம் வந்ததையே பெரும் கொண்டாட்டமாக்கினர் தவெக-வினர்.
விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதுமே அவரது கட்சியில் இணைய பலரும் தயாராகவே இருந்தனர். ஆனால், கட்சியின் செயல் திட்டங்கள், கொள்கைகளை விஜய் அறிவித்த பிறகு அத்தனை பேரும் அமைதியாகிவிட்டனர். முன்னுக்குப் பின்னான கொள்கை முழக்கங்கள், கள அரசியலில் விஜய் இறங்காதது, புஸ்ஸி ஆனந்தின் ஆதிக்கம், கட்சியின் ஆமை வேக நகர்வுகள் இதெல்லாம் தான் அந்த அமைதிக்குக் காரணம்.
கட்சியை அறிவித்த கையோடு மாநாடு நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, விஜய் தடாலடியாக கள அரசியலில் இறங்கியிருந்தால் கட்சி சுறுசுறுப்பாக இருந்திருக்கும். ஆனால், கட்சி தொடங்கி ஓராண்டு கழித்துத்தான் மாவட்டச் செயலாளர்களையே நியமிக்கிறார் விஜய். அப்படியானால் எந்த நம்பிக்கையில் பிரபலங்கள் இவரோடு இணைவார்கள் என்ற கேள்வியையும் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள்.
இன்னொரு பக்கம், திராவிடம், தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் என அனைத்தையும் கலந்துகட்டி அடிப்பதால், விஜய் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. விஜய் கட்சியில் ஏன் பிரபலங்கள் இணையவில்லை என்பதற்கான பதிலும் இதுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். புதிய கட்சிகள் தோன்றும்போது உடனடியாக கிளைகள் அளவில் கொடிகள் பறக்கத் தொடங்கும். ஆனால், அதுவும் தவெக-வுக்கு பெரிய அளவில் சாத்தியமாகவில்லை.
தவெக-வில் பிரபலங்கள் இணையாததால் விஜய் விரக்தியில் இருக்கிறாரா என்று அக்கட்சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியிடம் கேட்டோம். “கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சியை அறிவித்த போதே, ஒரு படத்தை முடித்துவிட்டு நேரடியாக அரசியல் களத்துக்கு வருவதாக சொல்லியிருந்தார் தலைவர்.
இடைப்பட்ட காலத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, 95 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளை நியமித்துள்ளார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 80 லட்சத்தை கடந்துவிட்டது. 2026 தேர்தலில் திமுக-வுக்கு மாற்றாக தவெக-வை மக்கள் நினைப்பதாலேயே இது சாத்தியமாகியுள்ளது. இந்த மிகப்பெரிய வரவேற்பால் தலைவர் மிக உற்சாகமாகவே இருக்கிறார்.
தவெக-வில் தங்களை இணைத்துக்கொள்ள ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தவெக நிர்வாகிகள் நியமனத்துக்கு பின்னர் தமிழகத்தில் காட்சிகள் மாறும், பல முக்கிய தலைவர்கள் எங்கள் கட்சியில் இணைவதைப் பார்ப்பீர்கள்” என்றார் அவர்.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விஜய் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் பலர் விஜய்யுடன் கைகுலுக்கலாம் என்கிறார்கள். பார்க்கலாம்!