“டெல்லியை போல பாஜகவால் பிஹாரில் வெற்றி பெற முடியாது” – லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல பிஹாரில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றும், அக்கட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. டெல்லி தேர்தல் வெற்றியை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் டெல்லியின் முடிவுகள் எதிரொலிக்கும் என்றும், அங்கும் பாஜக வெற்றி பெறும் என்றும் அக்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் நம்புகின்றனர்.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், “டெல்லி தேர்தல் முடிவின் தாக்கம் பிஹார் தேர்தலில் எதிரொலிக்காது. இங்கு அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். நாங்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) இங்கே இருக்கும் வரை பாஜக பிஹாரில் அரசாங்கத்தை அமைக்க முடியாது. மக்கள் பாஜகவையும் உங்களையும் (ஊடகங்களை) புரிந்து கொண்டுள்ளனர்” என தெரிவித்தார். அப்படியானால், பிஹாரில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், “தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பார்” என்று கூறினார்.

லாலு பிரசாத்தின் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, “லாலு பிரசாத் வருவாரா மாட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் என்டிஏ மீண்டும் வரும் என்பது உறுதியாகத் தெரிகிறது. மாநிலத்தை அழித்து, ஊழலில் ஆழமாக வேரூன்றிய லாலு பிரசாத் போன்ற ஒருவர் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தல் முடிவுகளை அடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட மத்திய அமைச்சரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் நிறுவனருமான ஜிதன் மாஞ்சி, டெல்லி ஒரு முன்னோட்டம்; அடுத்து பிஹார் வரவிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். பிஹார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சாம்ராட் சவுத்ரி, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் வளர்ச்சிப் பணிகளால் பிஹாரில் தேசிய ஜனநாயக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவரான உமேஷ் குஷ்வாஹா, பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அரசியல் தலைவிதி டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவிதியை விட மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், “லாலு பிரசாத் ஜி, உங்கள் மகன் உங்களை அரசியலுக்குத் தகுதியற்றவர். இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் நான்காவது கட்டத்தில் இருக்கிறீர்கள். 2010-இல் ஆர்ஜேடி எவ்வளவு மோசமாக செயல்பட்டது என்பதை வரலாறு சொல்லும். 2025 இல் மீண்டும் ஒருமுறை, ஆர்ஜேடி மீண்டும் தோல்வியை எதிர்கொள்ளும். என்டிஏ 225 இடங்களில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.