இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு வருகை தந்த எர்டோகனை, நூர் கான் விமானப்படை தளத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் வரவேற்றனர். துருக்கி அதிபருடன் அவரது மனைவி எமின் எர்டோகன், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வந்துள்ளனர். பிரதமர் மாளிகையில் எர்டோகனுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் அறிக்கைகளை அவர்கள் இணைந்து வெளியிட்டனர்.
அப்போது பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், “காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் ஐ.நா. தீர்மானத்தின்படி தீர்க்க வேண்டும். காஷ்மீர் மக்களின் விருப்பங்களை மனதில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எங்கள் அரசும் நாடும் கடந்த காலத்தைப் போலவே, இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றன.
பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்துவதில் துருக்கி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம். அறிவியல், வங்கி, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுடன் வர்த்தகம், நீர்வளம், விவசாயம், எரிசக்தி, கலாச்சாரம், குடும்பம் மற்றும் சமூக சேவைகள் என பல்வேறு துறைகளில் மொத்தம் 24 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “துருக்கியின் தலைவருக்கு பாகிஸ்தான் இரண்டாவது தாயகம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இங்கு வந்தது மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் சகோதர நாட்டிற்கு உங்கள் தூதுக்குழுவுடன் வருகை தருவதைப் பார்த்து பாகிஸ்தான் மக்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
பூகம்பங்கள், வெள்ள பாதிப்புகள் என எப்போதும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்பதற்காக துர்க்கிக்கு நன்றி. இன்றைய பாகிஸ்தானுக்கான உங்கள் வருகை நமது சகோதர உறவுகளுக்கு ஒரு புதிய நிலையை அளித்துள்ளது,” என்று கூறினார்.