புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில், அம்மாநில கலால் துறை சிறப்பு செயலாளரும் மாநில சந்தை கூட்டுறவு நிறுவன இயக்குநருமான அருண் குமார் திரிபாதியை கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரிபாதி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், திரிபாதி மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறவில்லை எனக் கூறிய சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், கடந்த 7-ம் தேதி சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இந்த சூழலில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “திரிபாதி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என உயர் நீதிமன்றம் கூறிய நிலையில், அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்? சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நோக்கம் குற்றம்சாட்டப்பட்டவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அல்ல.
வரதட்சனை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது போல பிஎம்எல்ஏ சட்டமும் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, திரிபாதிக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.