“சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா ஒரு சூப்பர்பவர்” – நெகிழ்ச்சியுடன் வர்ணித்த ஐ.நா. காலநிலை தலைவர்

புதுடெல்லி: சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா ஒரு சூப்பர் பவர் என்று வர்ணித்துள்ள ஐ.நா. காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல், மற்ற நாடுகள் பேசுகின்றன ஆனால், இந்தியா செயலில் காட்டியுள்ளது என புகழ்ந்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றின் உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சைமன் ஸ்டீல், “சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா ஏற்கனவே ஒரு சூப்பர்பவராக (வல்லரசாக) உள்ளது. 100 ஜிகாவாட்களுக்கு மேல் சூரியமின் சக்தி உற்பத்திக்கான அலகுகளை நிறுவிய உலகின் நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான இந்தியாவின் முயற்சி பாராட்டுக்குரியது. இவ்விஷயத்தில், சில அரசாங்கங்கள் பேச மட்டுமே செய்கின்றன. ஆனால், இந்தியா செயலில் காட்டியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத்துக்கு முன்கூட்டியே 2018 ஆம் ஆண்டுக்குள்ளாகவே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தற்போது அடுத்தகட்டமாக, நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பொருளாதார நன்மைகளை பெரிய அளவில் வழங்குவதற்கான உண்மையான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியா ஏற்கனவே இந்த திசையில் உறுதியாக முன்னேறி வருகிறது. உலகளாவிய சுத்தமான எரிசக்தியை இன்னும் வலுவாக ஏற்றுக்கொள்வது இந்தியாவின் பொருளாதார எழுச்சியை அதிகரிக்கும்.

நூற்றுக்கணக்கான ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதற்கான லட்சியத் திட்டங்களை உணர்தல், பசுமை தொழில்மயமாக்கல், மேம்பாடு, அளவிடுதல் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றின் புதிய அலையை வழிநடத்துவதற்கான வாய்ப்பை இந்தியா கொண்டுள்ளது. சில நாடுகள் மட்டுமே இத்தகைய வாய்ப்பை கொண்டுள்ளன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியா, காலநிலைத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவை, சுத்தமான எரிசக்தி, தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாற்றும். நாட்டின் தொழில்துறை உத்திகளையும் ஆழப்படுத்த இந்திய தலைவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.

2031-2035 காலகட்டத்திற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட காலநிலை மாற்றத்துக்கான பங்களிப்புகள் (NDCs) குறித்த திட்டங்களை உலக நாடுகள் இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியா உட்பட பல நாடுகள் பிப்ரவரி 10 ஆம் தேதிக்கான காலக்கெடுவை தவறவிட்ட நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.