அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலகிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எந்த விஷயமும் பேசவில்லை. இதனை விமர்சிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் வைகோ, “ சமூக அரசியல் பண்பாட்டுத் துறையில் இரண்டறக் கலந்திருக்கும் விகடன் பத்திரிக்கை இதழியல் துறையில் நூற்றாண்டு கண்ட சிறப்புக்கு உரியதாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து விகடனில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்காக விகடன் இணையதளத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கி இருக்கிறது.

நெருக்கடி காலத்தை அடிக்கடி நினைவூட்டுகிற பிரதமர் மோடி ஆட்சியில், நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு ஊடக பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை, எல்லைகளற்ற செய்தியாளர்கள் (சுளுகு) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையில், உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மதிப்பிடப்படுகிறது. 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2024-இல் இந்தியா 159-வது இடத்தில் உள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். விகடன் இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.