திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் ரமேஷை 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார்.
சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக நின்றார். ஆனால், ஒருகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் திருநாவுக்கரசர் தொடங்கிய எம்ஜிஆர் அண்ணா திமுக-வில் இணைந்தார். பிறகு திமுக-வில் இணைந்த ராமச்சந்திரனுக்கு 2006-ல் போட்டியிட வாய்ப்பளித்த கருணாநிதி, அவரை சுகாதாரத்துறைக்கு அமைச்சராக்கினார்.
அந்தக் காலத்தில் தென்மாவட்ட திமுக-வினர் யாரும் அழகிரிக்கு தலைவணங்காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருந்த ராமச்சந்திரன், கடைசி வரை அழகிரி வீட்டுப் பக்கம் போகாமல் இருந்தார். அதனால், ராமச்சந்திரன் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டு கைத்தறித் துறைக்கு அமைச்சரான வரலாறும் உண்டு.
இதுவரைக்கும் சாத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் என 9 தேர்தல்களில் வென்றிருக்கும் ராமச்சந்திரன், இப்போது வருவாய்த்துறைக்கு அமைச்சராகவும் இருக்கிறார். வயது முதிர்வு, சர்ச்சைப் பேச்சுகள் காரணமாக சாத்தூராருக்கு இலாகா மாற்றம், அமைச்சரவை யிலிருந்து நீக்கம் என்றெல்லாம் கசிந்த செய்திகளை எல்லாம் பொய்யாக்கி முதல்வரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராக தொடர்கிறார்.
இவரது மகன் ரமேஷ் 2016-ல், “விருதுநகர் திமுக-வில் உழைப்பவர்களுக்கு மாரியாதை இல்லை” என பழிபோட்டுவிட்டு அதிமுக-வில் இணைந்து தந்தைக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே தந்தையோடு சமாதானமாகி மீண்டும் திமுக-வுக்கு யுடர்ன் அடித்தார். இப்போது இவரைத்தான் தனது அரசியல் வாரிசாக கொண்டுவர பிரயத்தனப்படுகிறார் ராமச்சந்திரன்.
இதுகுறித்து பேசிய விருதுநகர் திமுக நிர்வாகிகள், “கடந்த முறையே தனக்கு சீட் கிடைக்கும் என ரமேஷ் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சரானதும் கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவுக்கு மாவட்ட அமைப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டார். தொலைநோக்குடனேயே மகனை இந்த இடத்தில் உட்காரவைத்தார் சாத்தூரார்.
இப்போது, அவரால் வரமுடியாத நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் சார்பில் ரமேஷ் தான் பங்கெடுக்கிறார். தனக்கு 6 முறை வெற்றியைத் தந்த சாத்தூர் தொகுதியில் இம்முறை மகனை நிறுத்தி ஜெயிக்கவைத்துவிட வேண்டும் என்பது தான் தற்போது சாத்தூராரின் ஒரே சிந்தனை.
அதற்கான முன்னேற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார். சாத்தூரார் தொடங்கிய ‘தங்கக் கலசம்’ எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் தான் இப்போது விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மகனுக்கு சீட் கிடைத்தால் இவர்களை வைத்து எப்படியும் மகனை கோட்டைக்கு அனுப்பிவிடலாம் என்பது அண்ணாச்சியின் கணக்கு” என்றனர்.
அப்பா உங்களை சாத்தூருக்கு தயார்படுத்துக்கிறாரா என்று ரமேஷிடம் கேட்டதற்கு, “தலைமை உத்தரவுப்படி கட்சி பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் என்ற முறையில் மாவட்டம் முழுவதும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்றபடி நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்” என்றார். தலைமை என்ன முடிவுசெய்கிறது என்று பார்க்கலாம்!