டெல்லி நிலநடுக்கம்: மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி,

டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது.

இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக கூறினர். எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. எல்லோரும் அமைதி காக்கும்படி கேட்டு கொள்கிறேன். நிலநடுக்க நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மக்கள் அமைதியாக, அதிகாரிகள் கூறும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.