போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், திருமண விழாவிற்கு சென்ற கோஷ்டியினர், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் வேனை நிறுத்தி, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். வேனிலும் சிலர் உட்கார்ந்துகொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேன் மீதும், நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.