புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஷ்வர்,

6-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மந்தீப் சிங் மற்றும் தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்நிலையில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜெர்மனியை சந்திக்கிறது.

ஜெர்மனி அணி நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் நடந்த இவ்விரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

முன்னதாக இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் பெண்கள் பிரிவில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் சந்திக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.