'பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவுது.. நிம்மதியா தூங்க முடியல'… வருவாய் அதிகாரியிடம் புகார் அளித்த முதியவர்

பத்தனம்திட்டா:

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அமைதியான பள்ளிக்கல் கிராமத்தில், அதிகாலையில் சேவல் கூவுவதால் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. பள்ளிக்கல் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ராதாகிருஷ்ண கரூப், சேவல் கூவுவதால் இரவில் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனக் கூறி இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.

தினமும் அதிகாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரான அனில் கபூரின் சேவல் இடைவிடாமல் கூவத் தொடங்குவதாகவும், இதனால் தனது தூக்கம் கெட்டு, அமைதியான வாழ்க்கை சீர்குலைவதாகவும் கூறி, அடூர் வருவாய் கோட்ட அதிகாரியிடம் (ஆர்டிஓ) புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட வருவாய் அதிகாரி விசாரணையை தொடங்கினார். பிரச்சினைக்கு காரணம் சேவல்தான் என்பதால், இருவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அனில் குமார் தனது வீட்டின் மேல்தளத்தில் சேவலை பராமரித்து வந்தது தெரியவந்தது. மேலும், சேவல் எழுப்பும் குரல், ராதாகிருஷ்ணனை உண்மையிலேயே தொந்தரவு செய்வதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பக்கத்து வீட்டுக்காரரிடம் அவரது கோழிக்கூண்டை மேல் தளத்திலிருந்து வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றும்படி ஆர்டிஓ உத்தரவிட்டார். இதற்காக 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.