வாஷிங்டன்,
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்,
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க ஜெலன்ஸ்கி நாடகம் ஆடி உள்ளார். உக்ரைன் அதிபர் தேர்தலை நடத்த விடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். உக்ரைனில் தேர்தல் நடத்தாவிடில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
2019 தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரான நிலையில் கடந்தாண்டுடன் அவர் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷியாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார். நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை என உக்ரைனில் சட்டம் உள்ளது. போருக்கு உக்ரைன் தான் காரணம் என டிரம்ப் கூறுவது தவறானது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.