NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' – இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து ‘ராயன்’ படத்தை இயக்கியிருந்தார்.

தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தற்போது இப்படம் தியேட்டர் ரிலீஸ்க்குத் தயாராகி, நாளை (பிப் 21) வெளியாகிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் குறித்து ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பார்த்தேன். படம் முழுக்க எனர்ஜியான தருணங்களாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

இந்த படத்தில் காதல் மற்றும் நட்பின் சித்தரிப்பு மிகவும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. தனுஷ் சார் சொன்ன மாதிரி ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’… திருச்சிற்றம்பலம் வைப்ஸ் கிடைக்கும்” என்று பாராட்டியிருந்தார்.

இதையடுத்துத் தற்போது இப்படம் குறித்து தனுஷ், ” ‘ராயன்’ படத்துக்கு அப்புறம் நான் இயக்கிய இருக்கிற படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ நாளை ரிலீஸ் ஆகுது. நாங்க இந்தப் படத்த எடுக்கும்போது எந்த அளவுக்கு ஜாலியாக, சந்தோஷமாக எடுத்தோமோ, நீங்க பார்க்கும்போது அதே சந்தோஷம் இருக்கும்னு நம்புறேன்.

இந்தப் படத்துல நடிச்சிருக்கிற இளைஞர்கள் எல்லாரும், அவங்களோட எதிர்காலத்த எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்காங்க. கண்ணுல கனவோட இருக்காங்க, அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். அந்த இடத்துல நானும் இருந்திருக்கேன், அந்த உணர்வு எனக்கு நல்லாவே தெரியும். படத்துல நடிச்சிருக்கிற எல்லாருக்கும் வாழ்த்துகள். நாளை படம் ரிலீஸ், எல்லாரும் என்ஜய் பண்ணி பாருங்க” என்று பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.