இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: தவுபால் மற்றும் இம்பாலின் கிழக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் உட்பட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சுரசந்த்பூரின் குகி தேசிய ராணுவத்தை சேர்ந்தவர். மூன்று பேர் தவுபாலில் உள்ள தடைசெய்யப்பட்ட கங்லிபாக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
கைதான தீவிரவாதிகள் அனைவரும், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.