புரளிகளால் போராளியாக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது.

இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழா​வில் பங்கேற்​காத​தில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்​தது. இதனைத் தொடர்ந்து அடுத்​தடுத்து செங்​கோட்​டையன் பங்கேற்ற மூன்று பொதுக்​கூட்​டங்​களில் பேசிய பேச்​சுகளை அடிப்​படையாக வைத்து, ஊடக விவாதங்கள் பரபரத்தன.

இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த 17-ம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த அவரை செய்தி​யாளர்கள் கேள்வி​களால் துளைத்​தனர். அப்போது, “பொதுச்​செய​லா​ளரிடம் கேட்க வேண்டிய கேள்​வியை எல்லாம் என்னிடம் கேட்​கிறீர்​களே… நான் ஒரு சாதாராண தொண்​டன்” என்று நழுவி​னார்.

இதனிடையே, சென்னை​யில் முதல்வர் ஸ்டா​லின் தலைமை​யில் நடந்த மத்திய அரசின் திட்​டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்​டத்​தில் செங்​கோட்​டையன் பங்கேற்​றார். இதை மனதில் வைத்​துத்​தான் சட்டமன்றத் தேர்​தலுக்காக அதிமுக-​வின் 82 மாவட்ட அமைப்பு​களுக்கு அறிவிக்​கப்​பட்ட பொறுப்​பாளர்கள் பட்டியலில் செங்​கோட்​டையன் பெயரை சேர்க்​காமல் விட்டு​விட்​டார் இபிஎஸ் என மீண்​டும் அவரைச் சுற்றி விவாதங்கள் வட்டமடிக்​கின்றன.

தன்னை வைத்​துப் பின்னப்​படும் சர்ச்​சைகள் குறித்து, செங்​கோட்​டையன் பலமுறை விளக்​கமளித்​தும், அவரை ‘போராளி​யாக’ மாற்றியே ஆக வேண்​டும் என ஊடகங்கள் கச்சை கட்டு​வதாக வருத்​தப்​படு​கின்​றனர் அவருக்கு நெருக்​க​மானவர்​கள். இதுகுறித்து மேலும் பேசிய அவர்​கள், “கடந்த ஆண்டு, கட்சி​யில் இருந்து பிரிந்​தவர்களை இணைக்க வேண்​டும் என்று முன்​னாள் அமைச்​சர்கள் குழு​வினருடன் இபிஎஸ்சை சந்தித்து வலியுறுத்​தி​னார் செங்​கோட்​டையன்.

இப்படியொரு சந்திப்பு நடக்கவே இல்லை என இபிஎஸ் மறுத்த நிலை​யில், “இணைப்பு தொடர்பான பேச்சு​வார்த்தை நடந்தது உண்மை” என செங்​கோட்​டையன் போட்டுடைத்தது தர்மசங்​கடத்​தின் முதல் புள்​ளியாக அமைந்​தது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலா​ள​ராக​வும், கட்சி​யின் அமைப்புச் செயலா​ள​ராக​வும் செங்​கோட்​டையன் உள்ளார். அவரது கட்டுப்​பாட்​டில் வரும் அந்தி​யூர் தொகு​தி​யைச் சேர்ந்த முன்​னாள் எம்எல்​ஏ-வான ரமணிதரன் எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்​செய​லா​ள​ராக​வும், கே.பி.எஸ். ராஜா துணைச் செயலா​ள​ராக​வும் அண்மை​யில் நியமிக்​கப்​பட்​டனர்.

அதேபோல், அந்தி​யூர் தொகுதி முன்​னாள் எம்எல்​ஏ-வான ஈ.எம்​.ஆர்​.​ராஜா மற்றும் நம்பியூரைச் சேர்ந்த வி.சி.சிவகு​மார் ஆகியோர் ஜெ. பேரவை மாநில துணைச்​செய​லா​ளர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். தனது மாவட்​டத்​தில், தனது ஆலோசனையைப் பெறாமல் இந்த நியமனங்​களைச் செய்தது செங்​கோட்​டையனை மிகவும் பாதித்​தது. இபிஎஸ்​சின் பாராட்டு விழாவை புறக்​கணிக்க இதுவும் ஒரு காரணம்.

அந்தி​யூர் தொகு​தி​யில் அதிமுக தோற்க இவர்கள் தான் காரணம் என செங்​கோட்​டையன் சுட்​டிக்​காட்டிய நபர்​களுக்கு எல்லாம் பதவி கொடுத்தது அவரை ரொம்பவே சங்கடப்​படுத்​தியது இந்த வருத்​தத்​தில் தான் அத்தாணி​யில் நடந்த பொதுக்​கூட்​டத்​தில் “துரோகி​களால் அந்தி​யூர் தொகு​தி​யில் தோற்​றோம்” என வெளிப்​படையாக செங்​கோட்​டையன் வெடித்​தார்.

இபிஎஸ்​சால் நியமிக்​கப்​பட்ட புதிய நிர்​வாகிகள் நான்கு பேரும் இந்தக் கூட்​டத்​தில் பங்கேற்​க​வில்லை. தற்போது கட்சி அமைப்பு ரீதியாக 82 மாவட்​டங்​களுக்கு பொறுப்​பாளர்களை நியமித்​துள்ளார் இபிஎஸ். ஏற்கெனவே, பூத் கமிட்டி அமைப்பது தொடர்​பாக​வும், கட்சி உறுப்​பினர் அட்டைகள் முறையாக சென்​றடைந்​துள்ளதா என்பதை சரிபார்க்​க​வும் மாவட்ட வாரியாக பொறுப்​பாளர்கள் அறிவிக்​கப்​பட்​டனர். தற்போது அறிவிக்​கப்​பட்ட நிர்​வாகி​களில் பெரும்​பாலானவர்கள் ஏற்கெனவே அறிவிக்​கப்​பட்ட பட்டியலில் இருப்​பவர்கள் தான்.

இபிஎஸ் அறிவித்​துள்ள 82 பொறுப்​பாளர்​களில் மாவட்ட செயலா​ளர்கள் யாரும் இடம்​பெற​வில்லை. எஸ்.பி.வேலுமணி தொடங்கி செங்​கோட்​டையன் வரை இந்த பட்டியலில் இடம்​பெற​வில்லை. இந்த விவரம் தெரி​யாமல் செங்​கோட்​டையனை புறக்​கணித்​ததாக செய்தி வெளி​யிடு​கின்​றனர். முதல்வர் தலைமையிலான ‘திஷா’ கமிட்டி கூட்​டத்​தில் ஒரு உறுப்​பினர் என்ற அடிப்​படை​யில் மட்டுமே செங்​கோட்​டையன் பங்கேற்​றார். ஆனால் இதைவைத்து, செங்​கோட்​டையனுக்கு ஸ்டா​லின் தூது என்றெல்​லாம் செய்திகளை பரப்​பி​னார்​கள்.

அடுத்​த​தாக, ஜெயலலிதா பிறந்​த​நாளை​யொட்டி மாநிலம் முழு​வதும் தொகுதி வாரியாக பொதுக்​கூட்​டங்களை நடத்த இபிஎஸ் அறிவித்​துள்ளார். இம்மாத இறுதி​யில் நடக்​கும் இக்கூட்​டங்​களில், கோபி​யில் செங்​கோட்​டையன் பேசுகிறார். அந்தி​யூரில் எஸ்.பி வேலுமணி பங்கேற்​கும் கூட்​டத்​தில், மாவட்டச் செயலா​ளராக செங்​கோட்​டையனும் பங்கேற்​கிறார். இதையெல்​லாம் கருத்​தில் கொண்​டாவது செங்​கோட்​டையனை மையப்​படுத்தி சர்ச்​சைகளைத் கிளப்புவதை நிறுத்​திக் கொள்ள வேண்​டும்” என்றனர்.

இவர்கள் இப்படிச் சொன்​னாலும், ஜனவரிக்கு முன்பு வரை செங்​கோட்​டையன் பங்கேற்ற அனைத்​துக் கூட்​டங்​களி​லும், “2026-ல் அதிமுக-வை வெற்றி பெறவைத்து இபிஎஸ்சை ​முதல்​வ​ராக்கு​வோம்” என்று ​முழங்​கி​னார். ஆ​னால், கடந்த மூன்று பொதுக்​கூட்​டங்​களில், “அ​திமுக ஆட்சி அமைப்​போம்” என்று ​முடித்​துக்​கொள்​வதுடன் மறந்​தும் இபிஎஸ் என்ற பெயரை உச்​சரிக்​கவோ, அவரது ஆட்​சி​யின் ​சாதனைகளை குறிப்​பிடவோ இல்லை என்​பதும்​ குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.