வாஷிங்டன்: “உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் புதினுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவர் அது தொடர்பாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டி மூலம் உக்ரைனை ட்ரம்ப் ஓரங்கட்டுவது மீண்டும் உறுதியாகியுள்ளது. முந்தைய பைடன் அரசு உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் வழங்கிவந்தது. இந்நிலையில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலைப்பாட்டில் 360 டிகிரி மாற்றம் ஏற்பட்டது. இது ஜெலன்ஸ்கியையும், நேட்டோ உறுப்பு நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முன்புபோல் அமெரிக்க ஆதரவை இனியும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஜெலன்ஸ்கிக்கு ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை தொடர்ச்சியாக ட்ரம்ப் உணர்த்தி வருகிறார்.
அந்த வகையில் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள அண்மைப் பேட்டியும் கவனம் பெறுகிறது. அந்தப் பேட்டியில் ட்ரம்ப் கூறியது: “ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. ஆனால் உக்ரைன் அதிபருடன் பேசவில்லை. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் நான் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கான அவசியமில்லை என்று கருதுகிறேன்.
மூன்று ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். ஆனாலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி கடுமை காட்டி வருகிறார். அதனால் நான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமேதுமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடர விடப்போவதில்லை. உக்ரைன் எல்லாவகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன்” என்று அவர் கூறினார்.
ஏற்கெனவே ஜெலன்ஸ்கி தேர்தல் நடைமுறைகளில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தாது ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கியை சரமாரியாக சாடினாலும் கூட அமெரிக்கா – உக்ரைன் இடையே விரைவில் அந்நாட்டின் தாதுக்களை பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு தேசத்துக்கு எதற்காக அவ்வளவு நிதி முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய ட்ரம்ப், அதற்கு இழப்பீடாகவே அந்நாட்டில் உள்ள அரிய வகையிலான தாதுக்களை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்யவிருப்பதாகக் கூறினார்.
தாதுக்களை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குப் பதிலாக மீண்டும் ராணுவ உதவியை அமெரிக்கா நீட்டிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி எதிர்பார்க்கிறார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஜெலன்ஸ்கி சுணக்கம் காட்டிவரும் சூழலில் ட்ரம்ப் உறுதிபட ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்திருக்கிறார். இதில் நியாயம் நிலைநாட்டப்படும் என்று ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.