போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ந்தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போப்பின் உடல்நிலை குறித்து வாடிகன் தேவாலயம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.