புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி உரிமம் தரும் விதிமுறைகளை தளர்த்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சர்ச்சை துறவியான யத்தி நரசிங்கானந்த் கடிதம் எழுதியுள்ளார்.
உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோயில் மடத்தின் தலைவர் சுவாமி யத்தி நரசிங்கானந்த். இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவ்வப்போது பேசி வருவதால் சர்ச்சைக்குள்ளானவர்.
இதுதொடர்பான புகார்களில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீன் பெற்றவர். இந்நிலையில் யத்தி நரசிங்கானந்த் சமீபத்தில் அவசர கூட்டம் நடத்தி ‘‘இந்துக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கிகள் வைத்திருக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன்பின் முதல்வர் ஆதித்யநாத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நரசிங்கானந்த் கூறும்போது, ‘‘துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளில் இந்துக்களும், இந்து தலைவர்களும் மதத்தை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை. தன்னை தானே பாதுகாக்க இந்துக்கள் துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் இந்துக்களுக்காக அதன் விதிமுறைகளை தளர்த்தி உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.
உ.பி.யில் உயர் வகுப்பினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரில் பலரும் துப்பாக்கிகளை வைத்திருப்பது வழக்கம். இன்னும் சிலர் துப்பாக்கிகள் ஏந்திய போலீஸ் அல்லது தனியார் பாதுகாவலர்களை வைத்து கொள்கின்றனர். துப்பாக்கி வைத்திருப்பதை அவர்கள் கவுரவமாகவே கருதுகின்றனர். இந்த கடிதத்தை நரசிங்கானந்த் தனது ரத்தத்தில் எழுதியுள்ளார்.
இத்துடன், ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறார். இதையும் முதல்வர் ஆதித்யநாத்துக்கு அனுப்ப உள்ளார். இந்த 2 கடிதங்கள் குறித்து நரசிங்கானந்த் ஆற்றிய உரையின் காட்சிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.