‘ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது’ – ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்

ஜெனிவா: தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் 58வது அமர்வில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஷித்திஜ் தியாகி பதில் அளித்தார். அவர் தனது பதிலில், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தனது பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் ராணுவமும் அதன் பயங்கரவாத கட்டமைப்பும் இணைந்து அளிக்கும் பொய்களை, பாகிஸ்தானின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் இங்கே தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இது வருந்தத்தக்கது, ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாகிஸ்தானின் இத்தகைய தொடர் குற்றச்சாட்டுகளால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் நேரம் தொடர்ந்து வீணடிக்கப்படுகிறது. நிலையற்ற தன்மையுடனும், உலக நாடுகளின் பொருளாதார உதவியுடனும் உயிர்வாழும் ஒரு தோல்வியுற்ற அரசால் ஐநா மனித உரிமை ஆணையத்தின் நேரம் தொடர்ந்து வீணடிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் இங்கு பேசும் மொழி பாசாங்குத்தனமானது. அந்த நாட்டின் நடவடிக்கைகள் மனிதாபிமானமற்ற தன்மை கொண்டவை. அதோடு, அதன் நிர்வாகம், திறமையற்றது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, இருக்கின்றன, எப்போதும் இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறி வருகிறது. இந்த வெற்றிகள், பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினரைத் துன்புறுத்துதல், ஜனநாயக விழுமியங்களை தொடர்ந்து பாதிக்கச் செய்தல் ஆகியவற்றையே கொள்கைகளாகக் கொண்ட ஒரு நாடாக, ஐ.நா.வால் அனுமதிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணிச்சலுடன் புகலிடம் அளித்த ஒரு நாடாக இருக்கும் பாகிஸ்தான் யாருக்கும் போதனை செய்ய முடியாது.

யாரையும் முட்டாளாக்காத வகையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை (OIC) பாகிஸ்தான் தனது ஊதுகுழலாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அதை கேலி செய்கிறது. இதுபோன்ற பிரச்சாரத்தை நாங்கள் மதிக்க விரும்பவில்லை, ஆனால் சில எளிய விஷயங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் அனைத்து மக்களுக்கும் கண்ணியத்தை உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.