‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ – சீமான்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார்.

“போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.

என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்.

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.

புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?” என தெரிவித்தார்.

“அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என சீமான் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

முன்னதாக, காவல் துறை சம்மனை ஏற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தினர்.

திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்: போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை காவல் துறை அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னணி என்ன? – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாது​காவலரை போலீஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்​பிட்​டபடி சீமான் காவல் நிலை​யத்​தில் ஆஜராக​வில்லை.

இதையடுத்து, நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் வியாழக்கிழமை மீண்​டும் சம்மன் ஒட்டப்​பட்​டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. சிறிது நேரத்​தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்​தெறிந்​தார். இதையடுத்து, அவரைக் கைது செய்​வதற்​காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்​ராஜேஷ் மற்றும் போலீ​ஸார் சீமான் வீட்டுக்குச் சென்​றனர்.

அப்போது, சீமான் வீட்​டில் பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​பெற்ற எல்லை பாது​காப்புப் படை வீரர் அமல்​ராஜ், போலீ​ஸாரை வீட்​டின் உள்ளே ​விடாமல் தடுத்து நிறுத்​தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்​கொண்டு உள்ளே சென்​றார். அப்போது, இரு தரப்​பினரிடையே தள்ளு​முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்​ராஜை போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தால், அவர்​களிடையே மோதல் ஏற்பட்​டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீ​ஸார் அமல்​ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்​துச் சென்று, காவல் துறை ஜீப்​பில் ஏற்றினர்.

இதற்​கிடை​யில், பாது​காவலர் அமல்​ராஜ் வைத்​திருந்த கைத்​துப்​பாக்​கியை நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு அவரிட​மிருந்து போலீ​ஸார் பறிமுதல் செய்​தனர். மேலும், சம்மனை கிழித்​ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்தச் சம்பவம் நடந்த​போது சீமான் மனைவி கயல்​விழி வீட்​டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடு​மாறு முறை​யிட்​டார். கைது செய்​யப்​பட்ட அமல்​ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

‘நான் கைதுக்கு பயப்பட மாட்டேன்’ – சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்ம் கூறும்போது, “காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம். எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது. அதேபோல் காவலாளி அமல்ராஜோ உள்ளிட்டோர் அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு. இதுபற்றி எனக்கும், எனது மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த அழைப்பாணை அங்கு ஏன் இருக்க வேண்டும்.

திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிப்பட்ட முறையில் அனைவரையும் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தான் தனக்கு ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) பேச வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். நான் கைதுக்கு பயப்பட மாட்டேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்ததும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கபடும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.