புதுடெல்லி: மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது, 36 மாநிலங்களில் 12-ல் மட்டுமே தேர்தல்கள் முடிந்துள்ளன. எனவே தேசிய தலைவர் தேர்தலுக்கு குறைந்தபட்சம் இன்னும் 6 மாநிலங்களில் தேர்தல் முடிக்க வேண்டியுள்ளது.
பிஹார், உ.பி., ம.பி., கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் இத்தேர்தல்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் முடிந்ததும் புதிய தேசிய தலைவரை பாஜக தேர்ந்தெடுக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கடந்த 2019 ஜூன் முதல் பொறுப்பு தலைவராக பணியாற்றிய பிறகு, 2020 ஜனவரி முதல் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
அவரது தலைமையின் கீழ், பாஜக 35 மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு, 16 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.