கேரளாவில் மாணவர்கள் இடையிலான மோதலில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், தமரசேரி நகரில் ஒரு தனியார் டியூஷன் சென்ட்டர் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று நடனமாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக் கலைக்கு பயன்படுத்தப்படும் நன்சுக் (கயிறால் இணைக்கப்பட்ட இரு கம்புகள்) என்ற ஆயுதத்தால் தாக்கியதில் எம்.ஜே. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரின் தலையில் காயம் எற்பட்டுள்ளது.

அந்த மாணவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அன்று இரவு தனது வீட்டுக்கு செல்லாமல் நண்பருடைய வீட்டில் தங்கி உள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தமரசேரி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை உணர்ந்த மருத்துவர்கள் அந்த மாணவரை கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், தமரசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேரை கைது செய்து சிறார் சீர்திருத்த வாரியத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு அத்துறையின் அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.