எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி,

2006-ம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக 2009ம் ஆண்டு இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ. கட்சி) தொடங்கப்பட்டது. இதனிடையே, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது.

இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதற்கு முன்பு அந்த அமைப்பில் இருந்த நிதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.கே. பைசியை அமலாக்கத்துறை கைது செய்தது. தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பைசி கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பைசி டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பைசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.