திப்பு சுல்தானின் வாரிசு என மக்களை நம்பவைத்து ரூ.5.5 கோடி சுருட்டிய தெலங்கானா மருத்துவரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் சுல்தான் ராஜு. இவர் தன்னை அனைவரிடமும் திப்பு சுல்தானின் வாரிசு என கூறிக்கொள்வார். எம்பிபிஎஸ் படித்து மருத்துவரான இவர் தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஜனகாமாவில் கே.கே ஹாஸ்பிடல்ஸ் எனும் பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்தி வந்தார். அங்கும் தான் ஒரு திப்பு சுல்தான் வாரிசு எனவும் ரூ.700 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் தன்னிடம் வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் கூறி வந்துள்ளார்.
கர்நாடகா மாநில அரசு தனக்கு ரூ.700 கோடியை ஒதுக்கி கொடுத்து, அதற்கு தலைவராகவும் நியமித்தது என அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இந்த பணத்தில் ஹைதராபாத்தில் விரைவில் ஒரு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டப்போகிறேன் என சுல்தான் ராஜு கூறி, அதில் பணி செய்ய பலரிடம் லட்சக் கணக்கில் வசூலித்துள்ளார். இப்படியாக ரூ.5.5 கோடி வரை வசூலித்த பிறகு திடீரென சுல்தான் ராஜு தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த சிலர் ஜனகாமா போலீஸ் நிலையத்தில் சுல்தான் ராஜு குறித்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுல்தான் ராஜுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.