இஸ்ரேல் ராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்பு

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீண்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவியில் இருந்தார். அதேவேளை, மார்ச் 5ம் தேதியுடன் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவதாக ஹர்சி ஹலிவி தெரிவித்தார். இதையடுத்து, புதிய ராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயல் சமீர் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி இயல் சமீர், ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன். ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.