நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநில உரிமையை காப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகளின் சார்பில் அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளன, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், இந்திய ஜனநாயக கட்சி செய்தி ஊடகப்பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உட்பட 59 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாஜக, தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும், முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழகத்தில் தற்போது மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைக்கப்படும் நிலையில், தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு 2026-ம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும், பொதுவாக தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டுதான் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் தற்போதுள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமது பிரதிநிதித்துவம் குறையும்.
இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை (534) உயர்த்தாமல், தொகுதிகளை பிரித்தால், தமிழகம் 8 மக்களவை தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள். 31 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். இன்னொரு முறையில் நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் அதற்கேற்ப பிரித்தாலும், தமிழகத்துக்கு இழப்புதான் ஏற்படும். தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்டால், அங்கு தமிழகத்தினுடைய குரல் எதிரொலிக்காமல் போய்விடும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல. தமிழகத்தின் உரிமையை சார்ந்தது. தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழகத்தை பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் ஒன்றிணைக்க முதற்கட்டமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும், கட்சி அரசியலை எல்லாம் மறந்து, அரசியலை கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆதரித்து ஒருமனதாக ஏற்று நிறைவேற்றினர்.
தீர்மானம் விவரம்: நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்து கட்சிக கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்துக்காக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை இந்த அனைத்து கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழகம் எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைளை தமிழகத்தின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்து கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது. இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
முன்னதாக மேற்கண்ட தீர்மானத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரித்து பேசினர். காலை 10 மணிக்கு தொடங்கி இக்கூட்டம் பிற்பகல் 2.15 மணி நிறைவடைந்தது.