சென்னை: மெட்ரோ ரயில் மேம்பாட்டுப் பணிகள் குறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10-ம் ஆண்டை நெருங்க உள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவையிலும், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று உள்ளன.
எனவே, அதற்கு ஏற்றார்போல, ரயில் இயக்கம் மற்றும் பயணிகளுக்கான வசதி அளிப்பதில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். கோயம்பேடு பணிமனையில் பழைய பொருட்களை மாற்றுவது, பழுதை சரி செய்வது, புதிய தொழில்நுட்பம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த 2 பணிகளை ரூ.10.84 கோடியில் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளோம். விரைவில் நிறுவனத்தை தேர்வு செய்து, ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.