சென்னை: ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் சார்பில், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலிய துணைத் தூதரகம், கிளீன்அப் ஆஸ்திரேலியா இயக்கம் மற்றும் அர்பேசர் சுமீத் இணைந்து சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிலாய் சாக்கி ஆகியோர் பங்கேற்று, கடற்கரை தூய்மைப் பணியை தொடங்கிவைத்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் இந்த நிகழ்வு, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக நிகழ்வாகத் திகழ்கிறது. தூய்மை நடவடிக்கைகள், மறுசுழற்சி மற்றும் நிலையான திட்டங்கள் மூலமாக, ஆஸ்திரேலிய அரசு நடத்தி வரும் கிளீன்அப் ஆஸ்திரேலியா இயக்கம் தனிநபர்களையும், சமூகங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஊக்குவித்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுப்ரியா சாஹூ, “கிளீன்அப் ஆஸ்திரேலியா இயக்கமும், தமிழக அரசால் தொடங்கப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரமும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி பயணிக்கின்றன. சென்னையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கேற்பதன் மூலம், இந்த பிரச்சாரங்களின் உணர்வை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். நமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் கூட்டாகச் செயல்படுகிறோம்” என்றார்.