பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
ஹார்ட் டிஸ்க் வாங்கியதற்காக ராம் கோபால் வர்மா கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்தைதயடுத்து அவர் மீது கடந்த 2018-ம் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நடப்பாண்டு ஜனவரி 21-ம் தேதி அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி.புஜாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழங்கிய தீர்ப்பில், ராம் கோபால் வர்மாவுக்கு செக் பவுன்ஸ் வழக்கில் 3 மாத சிறை தண்டனை விதித்ததுடன் ரூ.3,72,219 தொகையை புகார்தாரருக்கு 3 மாதத்துக்குள் திருப்பிசெலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனயை நிறுத்தி வைக்க கோரி ராம் கோபால் வர்மா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.குல்கர்னி அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
இயக்குநர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால், சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் வர்மாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா மீதான பிடிவாரண்ட் உத்தரவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.