மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கடந்த டிசம்பர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவிகிதம் பேர் 18-லிருந்து 34 வயதுடையவர்கள். மேலும், அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில், உத்தரப்பிரதேசம் (23,652), தமிழ்நாடு (18,347), மகாராஷ்டிரா (15,366), மத்தியப்பிரதேசம் (13,798) ஆகியவை இருக்கின்றன.

அந்தக் கூட்டத்தொடரில் பேசிய துறை சார்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை மறந்து விடுங்கள். சாலை விபத்துகள் அதிகரித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தப் பகுதியானது எங்கள் துறை வெற்றி பெறாத ஒரு பகுதியாகும்.” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நாட்டின் சாலை விபத்துகளுக்கு முக்கியமான குற்றவாளிகள் சிவில் இன்ஜினியர்கள்தான் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற Global Road Infratech Summit & Expo (GRIS) நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “சிறிய சிவில் தவறுகள் மற்றும் மோசமான சாலை வடிவமைப்புகளே விபத்துக்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றன. ஆனால், இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. சாலை விபத்துகள் தொடர்பாக, பல முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்வது நமக்கு நல்லதல்ல. ஆண்டுதோறும், 4,80,000 சாலை விபத்துகளும், அதில் 1,80,000 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அநேகமாக உலகிலேயே இதுதான் அதிகம்.

இந்த இறப்புகளில், 66.4 சதவிகிதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவிகிதம் இழப்பு ஏற்படுகிறது. மருத்துவர்கள், இன்ஜினியர்கள் என திறமையான இளைஞர்களின் இழப்பு உண்மையில் நம் நாட்டிற்கு பெரிய இழப்பு. நாட்டுக்கு இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான குற்றவாளிகள் சிவில் இன்ஜினியர்கள்தான். எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை. ஆனால், என்னுடைய 10 வருட அனுபவத்திற்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அதேபோல், இதில் மிக முக்கியமான குற்றவாளிகள் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பவர்கள். அதில், ஆயிரக்கணக்கான தவறுகள் இருக்கின்றன. இந்த அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்துறையினர் சிறந்த தொழில்நுட்பங்களையும், நிலையான கட்டுமானப் பொருள்களையும் பின்பற்ற வேண்டும். 2030-க்குள் விபத்துகளை 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு.” என்று தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
