தங்கம் கடத்தல் வழக்கில் திருப்பம்: நடிகை ரன்யா ராவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் சர்வதேச அளவில் தங்கம் கடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்ய‍ப்பட்டார். பெங்களூருவில் உள்ள‌ ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியது.

இந்நிலையில் ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்த‌து. துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரன்யா ராவ் பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தங்கம் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சில பெரிய நகை கடை அதிபர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

சிபிஐ வழக்குப் பதிவு: இந்நிலையில் ரன்யா ராவ் மீது சர்வதேச அளவில் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரிக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது. முதல்க்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.