வாஷிங்டன்,
ரஷியா -உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து காப்பாற்றி வந்தார். அதன் பிறகு ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. போரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த டிரம்ப் இதற்கான முன்னெடுப்புகளை தொடங்கினார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு கூட வாக்குவாதத்திலேயே முடிந்தது. அதன் பிறகு டிரம்ப் உட்பட அவரது நிர்வாகத்தில் உள்ள பலரும் கூட ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி எனக் கூட குறிப்பிட்டு விமர்சித்தனர். அதேபோல டிரம்ப் உடன் நெருக்கமாக நட்பைக் கொண்டுள்ள எலான் மஸ்க் கூட ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷியா உடனான போர் தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் எதிர்பார்ப்பதாகவும் அவர் ஒரு மோசமான நபர் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவர் மீண்டும் ஜெலன்ஸ்கியை விமர்சித்துள்ளார். தான் ஒரு பட்டனை தட்டினால் ஒட்டுமொத்த உக்ரைன் பாதுகாப்பு அமைப்பும் முடங்கி சரிந்துவிடும் என அவர் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், மோதல் தொடங்கிய சமயத்தில் நான் உக்ரைனுக்காக புதினுடன் நேரடியாக மோதத் தயாராக இருந்தேன். எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. நான் அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் காலியாகிவிடும். தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் உக்ரைன் பல ஆண்டுகளாகச் செய்யும் செயல்களால் பல படுகொலைகள் நடக்கிறது. உண்மையில் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும் போரை நிறுத்தவே விரும்புவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.