வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும், என வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும். பொதுமக்களின் தாக்குதலில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஊழியர் நல நிதிக்கு வருமானவரி பிடித்தம் செய்யக் கூடாது. வங்கிகளில் அயல்பணி மூலம் வெளியாட்களை பணி நியமனம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25-ம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
மேலும், வரும் மார்ச் 3-ம் தேதியன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.