Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உதவினார்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இறுதி வரை சென்று இந்திய அணி திரில்லாக வென்றிருந்தது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்திய அணி இந்தத் தொடரை வென்றதற்கு ரோஹித், கோலி, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களே காரணம் எனப் பேசி வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் மிக முக்கியமாக இடம்பெற வேண்டிய பெயர் ஸ்ரேயாஷ் ஐயர். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசியதைப் போல ஸ்ரேயாஷ் ஐயர் ஒரு சைலண்ட் ஹீரோவாக இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்புகளை ஆற்றியிருக்கிறார்.

Shreyas

கோலி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டார். ரோஹித் ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டார். வருண் ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டார். ஸ்ரேயாஷ் ஐயர் எந்த விருதையும் வெல்லவில்லை. ஆனாலும், ஒவ்வொரு போட்டியிலும் தவிர்க்கவே முடியாத ஆட்டத்தை ஆடி வைத்திருக்கிறார். ரோஹத் சொல்வதைப் போல மிடில் ஓவர்களில் இந்திய அணியின் மிக முக்கிய தூணாக இருந்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலியுடன் இணைந்து 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். தனிப்பட்ட முறையில் அரைசதத்தையும் அடித்திருந்தார். கோலி அந்தப் போட்டியில் நிதானமாகச் சதமடித்திருப்பார். கோலி ஒரு முனையில் நிற்க ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து அவருக்கு ஏதுவாக ஆடிக்கொடுத்து உதவியது ஸ்ரேயாஷ்தான்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித், கில், கோலி என மூவரும் 30 ரன்களுக்குள் அவுட் ஆகியிருப்பார்கள். போட்டி மொத்தமும் நியூசிலாந்தின் கையிலிருந்தது. அந்த சமயத்தில் அக்சரோடு கூட்டணி அமைத்து 98 ரன்களை எடுத்திருந்தார். தனிப்பட்ட முறையில் 79 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.

Shreyas

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கோலியோடு இணைந்து 91 எடுத்திருந்தார். அவர் மட்டும் 45 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இக்கட்டான கட்டத்தில் அக்சரோடு கூட்டணி சேர்ந்து 61 ரன்களை எடுத்திருந்தார். தனிப்பட்ட முறையில் 48 ரன்களை எடுத்திருந்தார்.

அத்தனை போட்டிகளிலுமே மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறார். இன்னொரு சிறப்பான விஷயம் ஸ்ரேயாஷூக்கு ஷார்ட் பால்தான் வீக்னஸ். அதிலிருந்தும் இப்போது மீண்டு வந்திருக்கிறார். டெக்னிக்கலாக நிறைய மாற்றங்களைச் செய்து ஷார்ட் பிட்ச் பந்துகளையும் திறம்பட எதிர்கொண்டிருக்கிறார். முடிந்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை எடுத்திருப்பவர் ரச்சின் ரவீந்திரா. இரண்டு சதங்களுடன் 263 ரன்களை எடுத்திருக்கிறார். அவர்தான் தொடர்நாயகன் விருதையும் வென்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை அடித்திருப்பது ஸ்ரேயாஷ் ஐயர்தான். 5 போட்டிகளில் 243 ரன்களை அடித்திருக்கிறார்.

Shreyas

ஸ்ரேயாஷ் ஒரு பக்காவான ஓடிஐ ப்ளேயர். இந்திய அணி பல காலமாக ஒரு நம்பர் 4 பேட்டரை தேடிக்கொண்டிருந்தது. அந்த இடத்துக்குக் கச்சிதமாக வந்து பொருந்தியவர் ஸ்ரேயாஷ். சமகாலத்தில் ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடக்கூடிய பேட்டர்களில் முதன்மையானவர். 2023 ஓடிஐ உலகக்கோப்பையில் மட்டும் 530 ரன்களை எடுத்திருந்தார். அப்படியே தொடர்ந்து இந்திய அணியில் ஆடியிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐக்கும் அவருக்கும் முரண்கள் ஏற்பட்டது. பிசிசிஐயின் சொற்படி கேட்டு உள்ளூர் போட்டிகளில் ஆட மறுத்தார். அதனால் அவரை வருடாந்திர சம்பள ஒப்பந்தத்திலிருந்தே பிசிசிஐ நீக்கியது. ஆனால், அதன்பிறகு ஸ்ரேயாஷ் ஆடிய உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடினார். ஐ.பி.எல் இல் கேப்டனாக கோப்பையை வென்றார்.

India

இதனால்தான் மீண்டும் அணிக்குள் வந்தார். இப்போது தவிர்க்கவே முடியாத அளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இனியும் அவருக்கு வருடாந்திர ஒப்பந்தத்தைக் கொடுக்க முடியாதென பிசிசிஐ-ஆல் சொல்லவே முடியாது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.