மெட்ரோ ரயில் திட்​டம்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாதை​யில் கடைசி பாலத்​தின் கட்​டு​மான பணி நிறைவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் போரூர் – பூந்தமல்லி வரையிலான உயர்மட்டப் பாதையில், கடைசி பாலத்தின் கட்டுமானப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.

9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

குறிப்பாக, பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணி ஆகியவை முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியான போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையில் கடைசி பாலத்தின் கட்டுமானப்பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இறுதி பாலப்பகுதியை (யு கர்டர்) குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள எஸ்பி 4 மற்றும் 5 ஆகிய தூண்களுக்கு இடையே வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர்கள் எஸ்.அசோக்குமார் (உயர்மட்ட வழித்தடம்), ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) உள்பட பலர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதுதவிர, தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள், 2 திறந்த வலை உத்திரங்கள், 164 இரும்பு பாலங்கள் ஆகியவை வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

இது, பூந்தமல்லி – போரூர் வரை உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது. இந்த வழித்தடத்தை அடுத்த ஆண்டில் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.