புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக மற்றும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது: பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் ஸ்டாலினும் என்மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர். நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 15 தேதியிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒப்புதல் தெரிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவிப்பது ஏன்?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் ஸ்டாலினும் எவ்வளவு பொய்களை அடுக்கினாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமிழ்நாட்டு மக்களின் ஏராளமான பிரச்சினைகளுக்கு திமுக தீர்வு காணவேண்டியுள்ளது. அதனை திசை திருப்பும் உத்தியாகவே மொழிகுறித்த பிரச்சினையை அது கையில் எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை குறித்த நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் நிச்சயம் அரசியல் லாபங்களுக்காகவும், அதன் அரசியல் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்காகவும் மட்டும்தான். திமுக அரசின் இந்த பிற்போக்கு அரசியல், தமிழக மாணவர்களின் வள மான எதிர்காலத்துக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பதாக அமையும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் லாபத்தை தவிர்த்து தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டுகிறேன். இவ்வாறு பிரதான் பேசினார். இதனிடையே, தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுடிஐஎஸ்இ+ தரவுகளின் படி, 2018-19-ல் 65.87 லட்சமாக இருந்த தமிழ்வழி மாணவர் சேர்க்கை 2023-24-ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி கல்வியிலில் இருந்து குறைந்துள்ளனர். 65 சதவீத மாணவர்கள் இப்போது ஆங்கில வழி பள்ளிகளில் மட்டுமே உள்ளனர். அதேசமயம், தமிழ் வழி மாணவர் சேர்க்கை 54% (2018-19)-லிருந்து 36% (2023-24)-ஆக குறைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஐந்தே ஆண்டுகளில் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை 3.4 லட்சத்திலிருந்து 17.7 லட்சமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7.3 லட்சத்திலிருந்து குறைந்துள்ளது. இந்த புள்ளவிவரங்கள் ஆழமான மாற்றம் மற்றும் உண்மையான நிலையை பிரதிபலிக்கிறது. தமிழ் மீடியத்தில் சேர்வோர் எண்ணிக்கைதொடர்ந்து குறைந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ் விளக்கம்: இதனிடையே, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவல்களை பரப்புவதால் உண்மைகள் மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை. தமிழக அரசின் 2024 மார்ச் 15-ம் தேதியிட்ட கடிதமும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே மத்திய அரசின் திட்டங்களை ஏற்கிறோம். அதற்காக அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஏற்க முடியாது. அந்த கடிதத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டு அதன்பரிந்துரைகளின்படி திட்டத்தில் சேருவது குறித்து முடிவு செய்வோம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை திணித்து தமிழகத்தின் கலாச்சாரத்தையும், மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் தற்போது அரசியல் செய்கின்றனர். தமிழக குழந்தைகள் நலனுக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம் நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்துக்கும் சிறந்த சேவையை செய்கிறீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளுக்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸும் வழங்கினார். இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.